Tuesday, August 21, 2012

Maranathin Vasal...

உலகின் தீர்க்கப்படாத மர்மம்: ‘பர்மியூடா முக்கோண’ மாய மறைவுகள்!

இது ஒரு முக்கோண கடல் பகுதி. இங்கு வந்த பல கப்பல்கள் மாயமாக மறைந்து போகின்றன. இந்த கடலுக்கு மேலே பறந்த பல விமானங்களும் மிஸ்ஸிங். என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.
காற்றில் கரைகின்றனவா? வேறொரு கிரகத்துக்கு இழுக்கப்படுகின்றனவா? அல்லது கடலின் அடிப்பகுதியை நோக்கி உறுஞ்சப்படுகின்றனவா?
இந்த கடல் பகுதியில் எத்தனையோ விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், விபத்துக்குள்ளான கப்பல்களிலோ விமானங்களிலோ இருந்த ஒருவரது உடல்கூட ஏன் இதுவரை கிடைக்கவில்லை?
உடல்களை விடுங்கள் – அவை சிறியவை. விபத்துக்குள்ளாகிய கப்பல்கள் அல்லது விமானங்களின் பாகங்கள் கூடக் கிடைக்காமல் மாயமாக மறைகின்றனவே. அது எப்படி?

இதுதான் பர்மியூடா முக்கோணம்
பல வருடங்களாக நடைபெற்றுள்ள ‘காரணம் கூறப்படாத விபத்துக்கள்’ எல்லாவற்றிலும், இப்படியான மாய மறைவுகள்தான் ஒரேயொரு ஒற்றுமை என்பது ஆச்சரியமாக இல்லையா?
இந்த இடத்தில் பொதிந்திருக்கும் மர்மம், எப்போது அவிழும்?
மேலே கூறப்பட்ட கேள்விகள் அனைத்தும் குறிக்கும் இடம் – பர்மியூடா முக்கோணம் (The Bermuda Triangle) எனப்படும் இடம். இந்த இடத்துக்கு மற்றொரு பெயர், பிசாசு முக்கோணம் (Devil’s Triangle)
அட்லான்டிக் சமுத்திரத்திலுள்ள ஒரு சிறிய பகுதி இது. எல்லைகள் எவை? முக்கோணத்தின் ஒரு பக்கம், அமெரிக்கா, புளோரிடாவின் சில பகுதிகள், மற்றொரு பக்கம், பஹாமாஸ், மூன்றாவது பக்கம், அட்லான்டிக் சமுத்திரம். இந்த ஏரியாவுக்குள், மயாமி, சான்-வான் (San Juan-க்கு சரியான உச்சரிப்பு) போட்டோ ரிக்கோ, மற்றும் மிட்-அட்லான்டிக் தீவான பர்மியூடா.
இந்த பிசாசு முக்கோணத்தில் நடைபெற்ற சில மர்மச் சம்பவங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாமா?
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள ஃபோட் லாரடேல் விமான தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு ரேடியோ செய்தி ஒன்று வருகின்றது.
“ஆபத்து! அபாய அறிவிப்பு!! எங்களுக்குக் கீழே திடீரென தரை தெரியவில்லை. நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதும் தெரியவில்லை”
இந்த அபாய அறிவிப்பு தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்தது, மேலே பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் இருந்து. அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான விமானம் அது. பிளைட் இலக்கம் 19.
விமானத்தில் இருந்து ரேடியோ மூலம் தரையை தொடர்பு கொண்ட விமானி யின் பெயர், லெப்டினென்ட் சார்ள்ஸ் டெய்லர். அன்று மதியம் 2 மணிக்கு பிளைட் இலக்கம் 19 விமானத்த்தில் புறப்பட்டு சென்றிருந்தார் – வழமையான ரோந்து நடவடிக்கைக்காக.

1945-ல் வெளியான பத்திரிகை தலைப்புச் செய்தி!
சம்பவம் நடைபெற்ற தினம் டிசம்பர் 5-ம் தேதி, 1945-ம் ஆண்டு.
மாலை 3.45-க்கு விமானம் திரும்பி விமானப் படை முகாமுக்கு வந்திருக்க வேண்டும். வரவில்லை. ரேடியோ மூலம் அபாய அறிவிப்புத்தான் வந்து சேர்ந்தது. விமானிக்கு, தாம் எங்கே பறக்கிறோம் என்பதே தெரியாத விசித்திர செய்தியுடன்!
“நீங்கள் இப்போது பறந்து கொண்டிருக்கும் பொசிஷன் என்ன?” தரைத் தொடர்பு அதிகாரி ரேடியோவில் கேட்டார்.
“மீண்டும் சொல்கிறோம். நாங்கள் இருக்கும் பொசிஷன் எது என்றே தெரியவில்லை. சற்று நேரத்துக்கு முன்புவரை கீழே தரை தெரிந்து கொண்டிருந்தது. திடீரென தரை தெரியாமல் மறைந்து விட்டது” விமானத்திலிருந்து பதில் வந்தது.
லெப்டினென்ட் சார்ள்ஸ் டெய்லர் அமெரிக்க விமானப் படையின் திறமைசாலியான விமானிகளில் ஒருவர். பல வருட ஃபிளையிங் அனுபவம் உடையவர். அவரே தாம் பறந்து கொண்டிருக்கும் பொசிஷன் தெரியாது என்று கூறியது, தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவர்களுக்கு மகா ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
விமானம் எங்கே போயிருக்க முடியும்? தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த ஃபிளைட் பிளானை பார்த்தார்கள். பிளைட் இலக்கம் 19-க்கு கொடுக்கப்பட்டிருந்த பறக்கும் பாதை, புளோரிடாவின் கரையோரமாக கிழக்கு நோக்கி பகாமாஸ் தீவுகள் வரை செல்வது. அது கிட்டத்தட்ட 160 மைல்கள் பறக்கும் தொலைவு.
அந்த இடத்தில் சென்றடைந்த பின், அங்கிருந்து வடக்கே 40 மைல்கள் பறந்து, மீண்டும் தென்மேற்குத் திசையில் திருப்பி புளோரிடாவிலுள்ள விமானப் படை முகாமுக்கு திரும்பி வரவேண்டும் என்பதே, விமானிக்கு கொடுக்கப்பட்ட பிளைட் பிளான்.
அன்றைய தினத்தில் ரோந்து நடவடிக்கைகளுக்காக பிளைட் இலக்கம் 19 தனியே செல்லவில்லை. அந்த விமானத்துடன், வேறு 4 விமானங்களும் புறப்பட்டுச் சென்றிருந்தன. அந்த விமானங்களும் வந்து சேரவில்லை. அவர்களிடம் இருந்து தகவலும் ஏதுமில்லை.
அந்த நாட்களில் அமெரிக்க விமானப்படையின் ரோந்து விமானங்கள் ஒவ்வொன்றிலும் மொத்தம் 3 பேர் இருப்பார்கள். ஒரு விமானி, ஒரு துப்பாக்கி இயக்குபவர், ஒரு ரேடியோ ஆபரேட்டர்.
1945, டிசம்பர் 5-ம் தேதி புறப்பட்டுச் சென்ற விமானங்களில் செல்ல வேண்டியவர்களில் ஒருவர் மாத்திரம் முன்கூட்டியே லீவுக்கு விண்ணப்பித்திருந்தார். அவர் ஒரு ரேடியோ ஆபரேட்டர். கடற்படை முகாமின் தலைமை அதிகாரி அவருக்கு லீவு கொடுத்திருந்தார். ஆனால் அவரது இடத்தை நிரப்புவதற்கு வேறு ஒரு ரேடியோ ஆபரேட்டரை நியமிக்கவில்லை.
விமானங்கள் புறப்பட வேண்டிய நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்புதான் இது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் ரோந்து விமானங்களை செலுத்த வந்த விமானிகள் யாரும் அதை பெரிது படுத்தவில்லை. அநேகமாக எல்லா விமானிகளும் ரேடியோ இயக்குவதில் பயிற்சி பெற்றவர்கள் என்பதால், ரேடியோ ஆபரேட்டர் இல்லாவிட்டால் பரவாயில்லை என்று விட்டுவிட்டார்கள்.
அது, அப்போது பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. இப்போது, விமானங்களுக்கு சிக்கல் வந்தபோது, அந்த விஷயமும் அலசப்பட்டது. புறப்பட்டுச் சென்ற விமானங்கள் திரும்பவில்லை. விமானத்திலிருந்து அபாய அறிவிப்பு வருகின்றது. மொத்தம் 5 விமானங்கள். அதில் 14 ஆட்கள்!
தரைக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து ரேடியோ உரையாடல்கள் தொடர்ந்தன.
“உங்களுக்கு தரப்பட்ட பிளைட் பிளானின் படி, நீங்கள் முதலாவது கட்ட பறத்தலை (first leg of the flight plan) முடித்து விட்டீர்களா?”
“முடித்து விட்டோம்” சார்ள்ஸ் டெயிலரிடம் இருந்து பதில் வந்தது.
“அப்படியானால் புளோரிடாவில் இருந்து 160 மைல்கள் கிழக்கே சென்றுவிட்டீர்கள்”
“ஆம்”
“இரண்டாவது கட்டப் பறத்தலை ஆரம்பித்து விட்டீர்களா?”
“இன்னும் இல்லை”
“நல்லது. இரண்டாவது கட்டத்தில் நீங்கள் வடக்கு நோக்கி 40 மைல்கள் பறப்பதாக பிளைட் பிளான் இருக்கிறது. அதைச் செய்ய வேண்டாம். விமானத்தை மேற்கு நோக்கித் திருப்பி தொடர்ந்து பறவுங்கள். கடலுக்குள் செல்லாமல், புளோரிடா கரையை நோக்கி வரத் துவங்குவீர்கள்” என்று தரையில் இருந்து ஐடியா கொடுக்கப்பட்டது.
இதற்கு, விமானத்தில் இருந்து வந்த பதில், தரைக்கட்டுப்பாட்டு அதிகாரியை தூக்கிவாரிப் போட்டது.
“மேற்கு எந்தத் திசையில் இருக்கிறது என்பதே தெரியவில்லை. எல்லாமே குழப்பமாக இருக்கின்றது. இப்போது கீழே கடல் தெரிகிறது. ஆனால் அது கூட வழமையாகத் தெரியும் கடல் போல இல்லை. எல்லாமே வித்தியாசம். நாங்கள் வேறு கண்டத்திலோ, கிரகத்திலோ இருக்கிறோமா?”
“மேற்கு எந்தத் திசையில் இருக்கிறது என்பதே தெரியவில்லை. எல்லாமே குழப்பமாக இருக்கின்றது. இப்போது கீழே கடல் தெரிகிறது. ஆனால் அது கூட வழமையாகத் தெரியும் கடல் போல இல்லை. எல்லாமே வித்தியாசம். நாங்கள் வேறு கண்டத்திலோ, கிரகத்திலோ இருக்கிறோமா?” என்று விமானத்தில் இருந்து வந்த ரேடியோ மெசேஜ்,  தரையில் இருந்தவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.
திசைகூடத் தெரியவில்லையா?
விமானங்கள் காலையில் தரையில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவற்றில் கோளாறுகள் எதுவுமில்லாமல் இருந்தன என்று மெக்கானிக்குகள் பரிசோதித்து கிளியரன்ஸ் கொடுத்திருந்தார்கள். அன்றைய தினத்தில் வானம்கூட முகில்கள் அற்று கிளியராக இருந்தது. மோசமான காலநிலை இல்லை. இரவு நேரம் அல்ல.
அப்படியான சூழ்நிலையில் விமானிக்கு மேற்கு எந்த பக்கத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை என்றால், அவர்களால் சூரியனைப் பார்க்க முடியவில்லை என்றும் அர்த்தமாகின்றது.
வானம் தெளிவாக இருக்கும்போது, இது எப்படிச் சாத்தியமாகும்?
விமானங்கள் புறப்பட்டுச் சென்ற நேரம், வேகம், ஆரம்ப திசை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, இந்த விமானங்கள் கிட்டத்தட்ட எந்த வான் பகுதியில் பறந்து கொண்டிருக்கலாம் என்பதை தரையிலிருப்பவர்களால் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.
அந்த வான்பரப்பு -
பர்மியூடா முக்கோணத்தின் மேலுள்ள வான் பகுதி!
எங்கேயிருக்கின்றது இந்த அபாய முக்கோணம்?
உலக வரைபடத்தில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து பர்மியூடா தீவுக்கு ஒரு கோடு கீறுங்கள். பர்மியூடா தீவில் இருந்து போட்டோ ரிக்கோ தீவுக்கு மற்றுமோர் கோட்டைக் கீறுங்கள். இறுதியாக போட்டோ-ரிக்கோ தீவிலிருந்து மற்றுமோர் கோடு கீறவேண்டும்.
இந்த மூன்றாவது கோடு போட்டோ ரிக்கோவிலிருந்து பகாமாஸ் தீவின் ஊடாக மறுபடியும் புளோரிடாவை தொடவேண்டும்.
கீறப்பட்ட மூன்று கோடுகளும் ஒரு முக்கோணத்தை உருவாக்குகின்றன அல்லவா. அதுதான். பர்மியூடா முக்கோணம் என்று அழைக்கப்படும் மர்மப் பிரதேசம். இந்தச் சிறிய கடற்பகுதியில்தான் கடலிலும் வானிலும் திடீர் மறைவுகள் பல ஏற்படுகின்றன.
அபாய முக்கோணத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்த 5 விமானங்களும் இப்போது மற்றுமோர் சிக்கலைச் சந்திக்கத் தொடங்கின. தரையுடன் அவர்கள் வைத்திருந்த ரேடியோ தொடர்புகள், சத்தம் குறைவாகவும், தெளிவில்லாமலும் போகத் தொடங்கின.
ரேடியோ தொடர்பில் வேறு சில ஒலிகளும் இடையூறு செய்ய தொடங்கின.
ஆனால் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இந்தப் பிரச்சனை இருக்கவில்லை.
வானில் இருந்த விமானி தரைக்கு கூறும் ரேடியோச் செய்திகளும் தெளிவாகக் கேட்டன. அதுமாத்திரமல்ல, வானில் இருந்த ஐந்து விமானங்களிலிருந்து ஐந்து விமானிகளும் தங்களுக்கிடையே பேசிக்கொண்டே உரையாடல்கள்கூட தரையில் இருந்தவர்களுக்குத் துல்லியமாகக் கேட்டது.
விமானிகளின் உரையாடல்களின்படி அவர்களது விமானங்கள் எல்லாவற்றிலும் இருந்த கன்ட்ரோல் உபகரணங்கள் சரியாக இயங்கவில்ல. ஏறுமாறான தரவுகளைக் காட்டின. அத்துடன் திசைகாட்டும் கம்பாஸ் கருவி முழுமையாகவே இயங்காது போய்விட்டிருந்தது.
விமானிகளின் குரல்களில் ஆரம்பத்தில் குழப்பம் தெரிந்தது. சிறிது சிறிதாக அந்தக குழப்பம் பயமாக மாறத் தொடங்குவது தெரிந்தது.
இதற்கிடையே விஷயம் தரையிலுள்ள மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. உயரதிகாரிகள் பலர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்து விட்டார்கள்.
அத்துடன் விமானிகளுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்களும் தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு அழைக்கப்பட்டார்கள். காரணம், தரையில் இருந்தபடியே ரேடியோ மூலமாக பயிற்சியாளர்களால், விமானம் இயக்குவது பற்றிய அறிவுறுத்தல்களை விமானிகளுக்கு தெரிவிக்கமுடியும்.
வந்திருந்த பயிற்சியாளர்கள் பல வருடங்களாக விமானிகளுக்கு பயிற்சி கொடுத்தவர்கள். புதிய விமானிகள் பயிற்சிக்காகப் பறக்கும்போது அவர்களுடன் பலதடவைகள் கூடவே பறந்தவர்கள். அத்துடன் அவர்களே எத்தனையோ தடவைகள் பர்மியூடா முக்கோணப் பகுதிக்கு மேலாக பறந்திருந்தவர்கள். அந்த வான் பகுதியை நன்றாக அறிந்திருந்தவர்கள்.
5 விமானிகளும் தமக்கிடையே பதட்டமாக பேசிக் கொண்டதை, கீழேயிருந்த பயிற்சியார்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருந்தார்கள். அவர்களது பேச்சுக்களில் இருந்து ஏதாவது க்ளூ கிடைக்கிறதா என்று தெரிந்து கொள்ள முயன்றார்கள்.
“உங்களது திசைகாட்டும் கருவியின் வாசிப்பு எப்படி இருக்கிறது? திசை தெரிகிறா?” ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் கேட்கிறார்.
“கருவி இயங்கவில்லை. தென்கிழக்குத் திசையில் அசையாமல் நிற்கிறது.”
“கடைசியாக திசைகாட்டும் கருவி எப்போது இயங்கியது என்பது ஞாபகம் இருக்கிறதா?”
“ஆம். கடைசியாக பகாமாஸ் தீவின் மேல் சிக்கன் ஷோவால்ஸ் பகுதி வான்பரப்பில் வைத்து விமானத்தை வடக்கு நோக்கித் திருப்பினேன். அப்போது திசைகாட்டும் கருவி சரியாக இயங்கியது.”
“அதன் பின்னர் இயங்கவில்லையா?”
“இல்லை” »
“எனது விமானமும் அப்படித்தான்” என்றார் மூன்றாவது விமானி ஒருவர்.
“அப்படியானால் அந்தக் கடைசி திருப்பலில்தான் எங்கோ தவறு இருக்கிறது.”
இதைத் தரையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த பயிற்சியாளர் ஒருவர், தனது அனுபவத்தை வைத்து ஒரு விஷத்தை ரேடியோ மூலம் விமானிகளுக்கு தெரிவித்தார்.
“பகாமாஸ் தீவிலிருந்து நீங்கள் வடக்கே 90 டிகிரி திருப்பியிருப்பீர்கள். காற்றின் வேகமோ அல்லது வேறு ஏதாவதோ உங்களது விமானங்களை சில டிகிரிகள் இடதுபுறமோ வலதுபுறமோ திருப்பி விட்டிருக்கலாம்.”
“சொல்லுங்கள். கேட்டுக்கொண்டிருக்கிறோம். சற்று உரத்த குரலில் கூறுங்கள். ரேடியோ தெளிவில்லை.”
“இப்போது உங்களது விமானங்கள் பகாமாஸ் தீவில் இருந்து வட-மேற்குத் திசையிலே அல்லது வட-கிழக்குத் திசையிலோ சென்று கொண்டிருக்கலாம்.”
“சாத்தியம்தான்”
“அப்படியானால் உங்கள் விமானம், அமெரிக்கக் கரையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறது. விமானங்களை 180 டிகிரி திருப்ப முடியுமா என்று பாருங்கள். அப்படி திருப்பினால், நீங்கள் புளோரிடாவின் தென் முனையிலுள்ள சிறிய தீவுகளை நோக்கி வர தொடங்குவீர்கள்.”
விமானங்கள் திருப்பப்பட்டன. சிறிது தூரம் பறந்தன.
இப்போது ரேடியோவில் மீண்டும் சார்ள்ஸ் டெயிலரின் குரல் கேட்டது.
“எங்களுக்கு கீழே ஒரேயொரு ஒற்றைத்தீவு தெரிகிறது. இப்போது அதையும் கடந்து செல்கிறோம். அதைத்தவிர வேறு எந்த நிலப்பகுதியும் கீழே தெரியவில்லை.”
டெயிலரின் இந்தக் கூற்றிலிருந்து ஒரு விஷயத்தை தரையில் இருந்தவர்கள் புரிந்து கொண்டார்கள்.
அந்த விஷயம்–
விமானங்கள் அமெரிக்கக் கரையை நோக்கி வரவில்லை.
காரணம், அமெரிக்க கரையை நோக்கி வந்தால், புளோரிடாவுக்கு அருகில் பல சிறு சிறு தீவுகள் இருக்கின்றன. அவை கண்களில் தட்டுப்பட்டிருக்கும். கீழே தெரிந்தது ஒரேயொரு ஒற்றைத் தீவு என்றால், விமானங்கள் வேறு ஏதோ திசையில் செல்கின்றன.
ஆனால அது எந்த திசை?
சரியாக மாலை 4 மணிக்கு விமானிகளிடையே நடைபெற்ற ஒரு உரையாடல், கீழேயிருந்தவர்கள் அதிர்ச்சியடைய வைத்தது.
அதுவரை அந்த ஐந்து விமானங்களுக்கும தலைமை கமாண்ட் விமானியாக இருந்த லெப்டினென்ட் சார்ள்ஸ் டெயிலர், அந்தப் பொறுப்பை மற்றொரு விமானியிடம் ஒப்படைத்துவிட்டார்.
இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது?
விமானிகளிடையே மிக மிக அவமானத்துக்குரிய ஒரு விஷயமாகக் கருதப்படுவது இந்தச் செய்கை. விமானிகள் கொண்ட குழுவொன்றுக்கு தலைமை கமாண்ட் அதிகாரியாக நியமிக்கப்படுவது என்பது, பதவிக்கும் அனுபவத்துக்கும் கொடுக்கப்படும் கௌரவம்.
அப்படிக் கொடுக்கப்பட்ட பொறுப்பை ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் ஒப்படைக்கிறார் என்றால், ஒன்று அவர் மிக மோசமாக காயமடைந்து செயலிழந்திருக்க வேண்டும். அல்லது, தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை, தன்னால் சரியாக நிறைவேற்ற முடியாது என்று புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
சார்ள்ஸ் டெயிலர் மனத்தளவில் பெரிதும் சோர்வடைந்து விட்டார் என்று தரையில் இருந்தவர்கள் புரிந்து கொண்டார்கள். விமானம் எங்கே இருக்கிறது, எந்தத் திசையில் செல்கிறது என்று எதுவுமே தெரியாத நிலையில், விமானிகளுக்கு ஏற்படக்கூடிய சோர்வு இது.
இதனால் அவரால் மற்றயவர்களுக்கு கமாண்ட் கொடுக்க முடியாது. வேண்டுமானால் மற்றயவர்களது அறிவுறுத்தல்களை செயல்படுத்த முயற்சிக்கலாம்.
டெயிலரால் பொறுப்பு கொடுக்கப்பட்ட விமானியின் பெயர், கேப்டன் ஸ்டீவர்.
சில நிமிடங்களில கேப்டன் ஸ்டீவரின் குரல், தரைக்கட்டுப்பாட்டு மைய ரேடியோவில் ஒலித்தது.
“எங்களது விமானங்கள் எந்த பொஸிஷனில் பறக்கின்றன என்பதை புரிந்து கொண்டு விட்டேன் என்று நினைக்கிறேன்” என்றார் அவர்.
விமானம் பறந்து கொண்டிருந்த இடத்தை நிஜமாகவே அவர் புரிந்து கொண்டாரா?
கேப்டன் ஸ்டீவரின் குரல், தரை கட்டுப்பாட்டு மைய ரேடியோவில், “எங்களது விமானங்கள் எந்த பொஸிஷனில் பறக்கின்றன என்பதை புரிந்து கொண்டு விட்டேன் என்று நினைக்கிறேன்” என்று கேட்டபோது, கீழே இருந்தவர்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் ஸ்டீவரின் குரல் மீண்டும் ரேடியோவில் ஒலித்தது. “இப்போது எல்லாமே எனக்கு புரிந்து விட்டது. நாங்கள் சரியான திசையில்தான் பயணத்திருக்கிறோம். ஆனால் அதீத உயரத்தில் பறந்துவிட்டோம். இதனால் புளோரிடாவைத் தாண்டி மெக்ஸிகோ வளைகுடாவுக்கு மேலே பறக்கிறோம். உயரம் அதிகமாக இருப்பதால் தரை தெரியவில்லை. அவ்வளவுதான்”
இந்தச் செய்தி கிடைத்ததும் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
கீழேயிருந்து அறிவுறுத்தல் அனுப்பப்பட்டது.
“உங்களது விமானங்கள் மெக்ஸிகோவை நோக்கிப் போகின்றன என்றால், விமானங்களின் உயரத்தைக் குறைத்து, கிழக்கு நோக்கித் திருப்புங்கள்.”
“சரி. அப்படியே செய்கின்றோம்.”
ஐந்து விமானங்களும் கிழக்கு நோக்கித் திருப்பப்பட்டன.
“உயரத்தை குறைந்து விட்டீர்களா?”
“இன்னமும் இல்லை. எல்லா விமானங்களிலும் உயரத்தைக் காட்டும் கருவிகள் செயலிழந்துள்ளன.”
“கீழே தரையோ கடலோ தெரிகின்றனவா?”
“இல்லை”
‘அப்படியானால் தைரியமாக உயரத்தைக் குறையுங்கள். மீட்டர்கள் இயங்கா விட்டாலும் பரவாயில்லை.”
“சரி. 10,000 அடிவரை குறைக்கலாமா?”
“செய்யுங்கள்.”
இப்படிச் சொன்னாலும், தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருந்தது. என்னதான் விமானிகள் 10,000 அடிவரை உயரத்தைக் குறைக்க போவதாகக் கூறினாலும், உயரத்தைக் காட்டும் கருவிகள் இயங்காத போது, அவர்களால் தங்களது விமானங்களின் உயரத்தை சரியாக 10,000 அடி குறைக்க முடியாது.
வேண்டுமானால் சுமாராக குறைக்கலாம். அவ்வளவுதான். அதுவும் ஆபத்துத்தான். ஆனால் வேறுவழியில்லை.
மேலும் 20 நிமிடங்கள் சென்றன.
இவர்களது விமானங்கள் ஸ்டீவர் கூறியதுபோல மெக்ஸிகோ வளைகுடா பக்கமாக சென்றிருந்தால், அவை கிழக்குத் திசையில் திருப்ப பட்டிருந்தால், இப்போது புளோரிடாவின் ஓரமாகவுள்ள சிறிய தீவுகள் கண்ணில் பட வேண்டும்.
ஆனால் தெரியவில்லை. கீழே கடலும் தெரியவில்லை.
“இதில் ஏதோ தவறு இருக்கிறது. நாங்கள் உயரத்தைக் கணிசமாக குறைந்து விட்டோம். விமானங்களை கிழக்குத் திசையில் திருப்பி பறக்கிறோம். அப்படியிருந்தும் எதுவும் தெரியவில்லை” விமானியின் குரல் லோசாக நடுங்குவதை, கீழேயிருந்தவர்கள் கவனித்தார்கள்.
“உயரத்தை இன்னமும் குறையுங்கள்”
“குறைக்கிறோம்.”
“நீங்கள் பறந்து கொண்டிருக்கும் இடத்தில் வெளியே பார்க்க முடியாதபடி, மேகங்களோ, பனி மூட்டமோ இருக்கிறதா?”
“இல்லை. வானம் தெளிவாக இருக்கிறது.”
இப்போது தரையில் இருந்தவர்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டிருந்தது. மேலேயிருந்து கூறியவர்கள் தாங்கள் புளோரிடாவைக் கடந்து மெக்ஸிகோ வளைகுடாவின் மேலே பறந்து கொண்டிருப்பதாகக் கூறியதால்தான், அவர்களை கிழக்கு பக்கமாகத் திரும்பும்படி தரையில் இருந்து கூறியிருந்தார்கள்.
ஒருவேளை, அவர்கள் மெக்ஸிகோ வளைகுடாவின் மேல் பறக்காமல், புளோரிடாவின் மறுபக்கத்தில் (அட்லான்டிக் சமுத்திரப் பக்கத்தில்) நின்றிருந்தால்?
கிழக்குப் பக்கம் திருப்பப்பட்ட விமானங்கள் புளோரிடா கரையை நோக்கி வராமல், நடுக்கடலை நோக்கச் சென்று கொண்டிருக்கும்.
அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு ரேடியோ நிசப்தமாக இருந்தது. விமானிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வதுகூடக் கேட்கவில்லை. கீழேயிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குக்கூட மேலேயிருந்து பதில் வரவில்லை.
ஐந்து நிமிடங்களின் பின்னர், ரேடியோவில் கரகரவென்று விசித்திரமான இரைச்சல் ஒலியொன்று சில விநாடிகள் கேட்டது. இரைச்சலின் முடிவில், ஐந்து விமானிகளில் ஒருவரின் குரல் ரேடியோவில் கேட்டது.
அவர் குழப்பமான நடுங்கும் குரலில், ஒரு வாக்கியம் சொன்னார்.
அந்த வாக்கியம்தான், ஐந்து விமானங்களில் இருந்தும் கடைசியாகப் பேசப்பட்ட வாக்கியம். அதன் பிறகு ஐந்து விமானங்களில் இருந்தவர்களும் தரையைத் தொடர்பு கொள்ளவே இல்லை.
கடைசியாகக் கூறப்பட்ட வாக்கியம் -
“எமது விமானங்கள் இப்போது வெள்ளை நிற திரவத்துக்குள் நுழைகின்றன”
ஐந்து விமானங்களும் அதிலிருந்த 14 பேரும் மாயமாக மறைந்து போனது அமெரிக்க விமானப்படையில் பெரிய குழப்பத்தை உருவாக்கியது. மாயமாக மறைவதற்கு முன் ஒரு விமானி, “எமது விமானங்கள் இப்போது வெள்ளை நிற திரவத்துக்குள் நுழைகின்றன” என்று கூறியதன் அர்த்தம் யாருக்கும் புரியவில்லை.
மாயமாக மறைந்த விமானங்களை தேடிச் செல்லவும், மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கும், அவசர அவசரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இப்போதுள்ள முக்கிய கேள்வியே, எங்கே போய் தேடுவது? விமானத்தை செலுத்திய விமானிகளுக்கே, தாம் எங்கே பறந்து கொண்டிருந்தோம் என்பது தெரியவில்லை.
மாயமாக மறைந்து போன விமானங்கள் தொடர்ந்தும் பறந்து கொண்டிருக்க முடியாது. ஏதோ ஒரு கட்டத்தில் எரிபொருள் தீர்ந்துபோகும். அப்போது கீழே விழத்தான் வேண்டும்.
கீழே விழும் இடம், அனேகமாக அட்லான்டிக் சமுத்திரமாகத்தான் இருக்கும் என்று ஒரு தியரி வைத்துக் கொண்டார்கள்.
தேடுதல் வானில் மட்டுமின்றி, கடலிலும் நடைபெறவேண்டும் என்பதால், மீட்புப் பணிக்காக கடலில் இறங்கக்கூடிய விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
மார்டின் மரைனர் ரகத்திலான விமானம் அது. அந்த நாட்களில் இந்த ரக விமானங்களை பறக்கும் படகு (flying boat) என்பார்கள். அதில் மொத்தம் 13 பேர் மீட்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டனர்.
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான விமானம் அது. 77 அடி நீளமானது. கடலில் விபத்துகள் ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக என்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட அதில், நவீன மீட்பு உபகரணங்கள் எல்லாம் இருந்தன.
புளொரிடாவில் இருந்து வடகிழக்குத் திசையில் தேடுதல் விமானம் கிளம்பிச் சென்றது.
விமானம் கிளம்பி சுமார் 10 நிமிடங்களின் பின்னர், மார்டின் மரைனர் விமானத்தின் விமானி ரேடியோ மூலம் தரையைத் தொடர்பு கொண்டார். தரையிலிருந்து 5000 அடி உயரத்துக்கு மேலே கடுமையான காற்று வீசுவதாகக் கூறினார்.
விமானம் புறப்பட்டு 20 நிமிடங்களின் பின்னர் தரையில் இருந்தவர்கள் விமானியை ரேடியோவில் அழைத்து, “விமானம் இப்போது எந்த இடத்தில் பறந்து கொண்டிருக்கிறது” என்று கேட்டார்கள்.
மறுமுனையில் பதில் இல்லை.
தொடர்ந்து மீண்டும், மீண்டும் ரேடியோவில் அழைத்துப் பார்த்தார்கள். பதில் இல்லை.
மாயமாக மறைந்துபோன 5 விமானங்களையும், 14 பேரையும் தேடுவதற்காக, 13 பேருடன் அனுப்பப்பட்ட விமானமும் மாயமாக மறைந்து விட்டிருந்தது.
சுமார் 5 மணி நேரம், மார்டின் மரைனர் விமானத்தில் இருந்து ஏதாவது தகவல் வரும் என்று காத்திருந்தார்கள். பலன் பூச்சியம்தான்.
மறுநாள் காலை மிகப் பெரிய அளவிலான மீட்பு நடவடிக்கை ஒன்றுக்கான ஆயத்தங்கள், இரவோடு இரவாகச் செய்யப்பட்டன. அதுவரையில் அமெரிக்காவில் செய்யப்பட்ட மிகப் பெரிய மீட்பு நடவடிக்கை அதுதான்.
கடற்படைக்கு சொந்தமான எல்லைப்புற ரோந்துக் கப்பல்கள் எட்டு, பல நீர்மூழ்கிக் கப்பல்கள், நூற்றுக்கணக்கான தனியார்…சிறு கப்பல்கள், யுத்தக் கப்பல்கள் (டிஸ்ட்ராயர்கள்) நான்கு, என்று நினைத்தே பார்க்க முடியாத அளவில் அளவிலான தேடுதல் கடலில் ஆரம்பமாகியது.
இவ்வளவும் போதாதென்று, அமெரிக்க கடற்படையின் பெரிய விமானம் தாங்கிக் கப்பலான சாலமன்ஸ், அட்லான்டிக் கடலில் தேடுதல் பகுதிக்கு நகர்த்தப்பட்டது. சாலமன்ஸ் கப்பலில் இருந்த விமானங்களின் எண்ணிக்கை அறுபது.
அதைவிட அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான விமானத் தளங்களில் இருந்து உதவிக்காகத் தருவிக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 240.
பிரிட்டனின் ராயல் விமானப் படைக்குச் சொந்தமான பல விமானங்கள், பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த பகாமாஸ் தீவுகளிலும், மேற்கிந்திய தீவுகளிலும் இருந்தன. விஷயம் கேள்விப்பட்டு அவையும் உதவிக்கு வந்தன.
கடலிலும், வானிலும், தரையிலும் ஒவ்வொரு சதுர கிலோ மீட்டரும் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டது. விமானங்கள் சில கடல் மட்டத்திலிருந்து வெறும் 400 அடி உயரத்தில் பறந்து தேடின.
அமெரிக்க விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி கொடுக்கும்போது, விமானத்தை ஒரேயிடத்தில் நகராமல் நிறுத்தி வானில் மிதந்தபடி இருப்பதற்கான பயிற்சி ஒன்று கொடுக்கப்படும். இப்படி வானில் ஒரேயிடத்தில் நிறுத்தப்பட்டு மிதக்க விடப்பட கூடிய ஆகக்கூடிய நேரம் 90 விநாடிகள்.
கடல் மட்டத்தில் ஏதாவது தெரியும் இடங்களில், விமானங்கள் 90 விநாடி மிதப்புக்களைச் செய்து, கீழே தெரியும் பொருட்களை போட்டோ எடுத்தன.
மொத்தமாக 2 லட்சத்து 80ஆயிரம் சதுர மைல்கள் கடற்பரப்பளவு தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது. கடலில் விழுந்த விமானங்கள் கடலுக்கு அடியே போயிருக்கலாமோ என்று நீர்மூழ்கிக் கப்பல்கள் தேடின.
பலன் பூச்சியம்!
முதலில் தொலைந்து போன 5 விமானங்களும், அதைத் தேடச் சென்ற மற்றுமோர் விமானமும், 6 விமானங்களிலும் இருந்த 27 பேரும் எந்தவொரு சுவடுமில்லாமல், மாயமாக மறைந்தே போயிருந்தார்கள்.
இந்த மர்மத்துக்கு எப்படி விடை கண்டுபிடிப்பது என்றே யாருக்கும் புரியவில்லை.
கடைசியாக விமானியிடமிருந்து வந்த தகவலான “எமது விமானங்கள் இப்போது வெள்ளை நிற திரவத்துக்குள் நுழைகின்றன” என்ற வாக்கியத்தில் தான் இந்த மர்மத்துக்கான விடை இருக்கிறது என்று பலர் ஆராய்சியில் இறங்கினார்கள்.
விமானம், கடலுக்கு மேல் இறுதியாக பறந்தது என்று எடுத்துக் கொள்ளலாம். தண்ணீருக்கோ நிறம் கிடையாது. விமானத்தில் இருந்து பார்க்கும்போது கடல் நீல நிறமாக தெரியலாம். அலை அடிப்பதை உயரத்திலிருந்து பார்க்கும்போது சில சமயங்களில் வெள்ளை நிறத்தில் தெரியலாம். ஆனால், தண்ணீருக்கு அருகே விமானம் வந்துவிட்டால், தண்ணீர் வெள்ளையாக தெரியாது.
இவர்களது விமானம் வெள்ளை நிறமான திரவம் ஒன்றுக்குள் பிரவேசித்திருக்கிறது!
வானத்தில் வெள்ளை நிறமான திரவம் எங்கேயிருக்கும்? யாராலும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.
அமெரிக்க விமானப்படை விமானங்களின் மறைவுபற்றி ஆராய விசாரணைக்குழு  ஒன்றை அமைத்தது. அதில் விமானப்படை அதிகாரிகள், ஏவியேஷன் வல்லுனர்கள், விண்வெளி விஞ்ஞானிகள், ஆராய்சியாளர்கள் என்று பலர், இந்த விமானங்கள் மறைந்ததற்கு ஒவ்வொரு விதமான தியரிகளைச் சொன்னார்கள்.

முதலில் தொலைந்து போன 5 விமானங்களும், அதைத் தேடச் சென்ற மற்றுமோர் விமானமும், 6 விமானங்களிலும் இருந்த 27 பேரும் எந்தவொரு சுவடுமில்லாமல், மாயமாக மறைந்தே போயிருந்தார்கள்.
அமெரிக்க விமானப்படை விமானங்களின் மறைவுபற்றி ஆராய விசாரணைக்குழு  ஒன்றை அமைத்தது. அதில் விமானப்படை அதிகாரிகள், ஏவியேஷன் வல்லுனர்கள், விண்வெளி விஞ்ஞானிகள், ஆராய்சியாளர்கள் என்று பலர், இந்த விமானங்கள் மறைந்ததற்கு ஒவ்வொரு விதமான தியரிகளைச் சொன்னார்கள்.
விமானப்படை அதிகாரிகளால் கூறப்பட்டது, “முதலில் அனுப்பப்பட்ட 5 விமானங்களும் வானில் ஒன்றுடன் ஒன்று மோதி வீழ்ந்திருக்கலாம்” என்பதாக ஒரு சாத்தியம்.
அப்படி நடந்திருந்தால், மோதிக் கடலில் விழுந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் எங்கே? இறந்தவர்களின் உடல்கள் எங்கே? தேட அனுப்பப்பட்ட விமானம் எங்கே? என்று விசாரணைக்குழு கேட்ட கேள்விகளுக்கு, விமானப்படை அதிகாரிகளிடம் பதில் இல்லை.
விசாரணையின்போது கூறப்பட்ட அடுத்த சாத்தியம், பர்மியூடா முக்கோணப் பகுதிக்கு மேலாக, வருடத்தில் குறிப்பிட்ட ஓரிரு தினங்களில் வரும் செவ்வாய் போன்ற கிரகம் ஒன்றுக்கு, விமானங்கள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்பது.
புவியீர்ப்பு விசை வானில் ஒரு உயரம் வரையுள்ள பொருள்களை கீழ்நோக்கி இழுப்பதுபோல, குறிப்பிட்ட சில தினங்களில், குறிப்பிட்ட ஒரு கிரகத்திலிருந்து அதீத ஈர்ப்பு விசை ஏற்பட்டு விமானங்கள் மேல் நோக்கி இழுக்கப்பட்டிருக்கலாம்.
பூமியின் மேற்பரப்பில் தரையும், தண்ணீரும் இருப்பதுபோல, அந்தக் கிரகத்தின் மேற்பரப்பில் வெள்ளை நிறமான திரவம் இருக்கலாம்.
இந்தச் சாத்தியம் ஒரு ‘மே-பி’ ரகத்திலான சாத்தியமே தவிர, நிரூபிக்க முடியாத சாத்தியமாக விசாரணைக்குழுவால் பதிவு செய்யப்பட்டது.
மூன்றாவது சாத்தியம், அமெரிக்க வானியல் ஆய்வு விஞ்ஞானிகள் அடங்கிய முழு ஒன்றினால் கூறப்பட்டது.
அதன்படி, வெளிக் கிரகம் ஒன்றில் இருந்து வரும் ஆட்களின் விண்வெளிக் கலம் ஒன்று (பறக்கும் தட்டு போன்ற ஒரு சமாச்சாரம்) இந்தப் பகுதியில் உலாவலாம். பூமியில் வசிக்கும் மக்களை ஆராய்சி செய்வதற்காக அவர்கள், இவர்களை விமானங்களுடன் சேர்த்து தங்களது விண்கலங்களுக்குள் உறுஞ்சி எடுத்துச் சென்றிருக்கலாம்.
இந்தச் சாத்தியத்துக்கு ஆதாரமாக அந்த விஞ்ஞானிகள் குழு காட்டியது, பல சந்தர்ப்பங்களில் பூமியில் நடமாடிய இனம் தெரியாத விண்கலங்களும், கண்டெடுக்கப்பட்ட அவற்றின் சிறு பாகங்களும். வேற்றுக் கிரகத்திலிருப்பவர்கள் பூமிக்கு வந்து போயிருப்பதற்கு இவை சான்றுகள் என்று அவர்கள் வாதிட்டார்கள். (இந்த வேற்றுக்கிரக மனித நடமாட்டங்கள் பற்றி, சுவாரசியமான பல தகவல்கள் உள்ளன)
இதுவும் ‘நடந்திருக்கலாம்’ வகையிலான அனுமானமே தவிர, நிரூபிக்கப்படக் கூடியதல்ல என்றது விசாரணைக்குழு.
கடைசியாக ஐரோப்பிய விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் அடங்கிய ஆராய்சிக் குழு ஒன்று விசாரணைக் குழுவின் முன்னர் ஒரு சாத்தியத்தைக் கூறியது.
இன்றுவரை அந்தச் சாத்தியம் தான் விஞ்ஞானிகள் மட்டத்தில் ஓரளவு நம்பக்கூடிய சாத்தியம் என்று கூறப்படுகிறது.
பர்மியூடா முக்கோணத்தில் நடைபெறும் மாய மறைவுகளுக்கான ஊகிக்கப்பட்ட காரணங்களில், இப்போது கூறப்போகும் காரணத்தை நீங்கள் எந்த அளவுக்கு நம்புவீர்களோ தெரியாது. ஆனால், ஆச்சரியகரமாக இதுதான் விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் பலரால், இன்றுவரை நம்பப்படும் காரணம்.

அவர்களால் கூறும் காரணத்தின்படி, பர்மியூடா முக்கோணப் பகுதியில், கடலுக்கு மேலே ஒருவகையான மின்காந்த அலைகளினால் (electromagnetic waves) உருவாக்கப்படும் சக்தி இயங்குகிறது. இந்த காந்த சக்தி அலைகள் எப்போதும் இருப்பதில்லை.
காலநிலை சடுதியாக மாறும்போது, மின் காந்த அலைகள் வானில் ஒன்றுடன் ஒன்று மோதும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே இந்த அதீத சக்தி, கடலின் மேல் உள்ள வானில் உருவாக்கப்படுகின்றது.
இவர்கள் குறிப்பிடும் சக்தி என்ன செய்யுமென்றால், விண்வெளியில் சில சுருள்களை ஏற்படுத்தும். Space wraps அல்லது time wraps என்று இதை அழைக்கிறார்கள். இந்த சுருள்கள் அல்லது wraps ஏற்படும்போது, அது தோன்றும் பகுதியில் உள்ள அனைவரும் அதற்குள் சிக்கி கொள்கிறார்கள். அதாவது, கண்களுக்கு தென்படாத ஒரு கூண்டுக்குள் அடைபட்டுக் கொள்கிறார்கள்.
இந்தச் சுருளில் அடைபட்டுக் கொள்பவர்கள், வெளியே எங்கேயும் போய்விடுவதில்லை. நீங்களும் நாங்களும் இருக்கும் இதே பூமியின் பிரபஞ்ச எல்லைக்கு உள்ளேயே இருக்கிறார்கள். ஆனால், மற்றுமோர் பரிமாணத்தில் (another dimension) இருப்பார்கள். அல்லது மற்றுமோர் ‘காலத்தில்’ இருப்பார்கள்.
இதை இன்னுமோர் விதமாக சொன்னால், பர்மியூடா முக்கோணத்தில் இருந்து மாயமாக மறைந்து போகும் ஆட்களும், கப்பல், விமானம் போன்ற சாதனங்களும் இங்கேதான் இருக்கின்றன. ஆனால் எங்களது கண்களில் படாத பரிமாணம் ஒன்றில் இருக்கின்றன.
இவர்கள் சிக்கிக் கொண்ட பரிமாணம், கடந்த காலமாகவும் இருக்கலாம். எதிர்காலமாகவும் இருக்கலாம் என்கிறார்கள் சில விஞ்ஞானிகள். அதாவது மறைந்து போனவர்களில் சிலர் கடந்த நூற்றாண்டுக்கும் போயிருக்கலாம், இனி வரப்போகும் நூற்றாண்டுக்கும் போயிருக்கலாம்.
ஏற்கனவே கூறியிருந்தோம், இதை நம்புவது கடினம் என்று. ஆனால், இந்த தியரியில் பல ஆராய்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. விஞ்ஞானிகள் மட்டத்தில் பலரால் இந்த தியரி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. Time warpகளை அடிப்படையாக வைத்து, பல சயின்ஸ் ஃபிக்ஷன்களும் எழுதப்பட்டிருக்கின்றன.
இந்த காரணத்தை விட்டால், பர்மியூடா முக்கோணத்தின் மர்ம மறைவுகளுக்கு வேறு எந்தவித காரணத்தையும் யாராலும் சொல்ல முடியவில்லை – இன்றுவரை.
உலகின் தீர்வு காணப்படாத மர்மங்களில் ஒன்றாகவே இதுவரை இருந்து வருகின்றது. பர்மியூடா முக்கோணத்தில் நடைபெற்ற ஒரேயொரு சம்பவத்தை மாத்திரம் கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரை நடைபெற்ற மாய மறைவுகள் நூற்றுக்கு மேற்பட்டவை. அத்தனையிலும் மறைந்தவை விமானங்கள், அல்லது கப்பல்கள்.
பர்மியூடா தீவு கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலேயே (1515ம் ஆண்டு) அதை ‘பேய் தீவு’ என்று கூறியதாகத் தெரிகின்றது. சேக்ஷ்பியரின் The Tempest நாடகத்தில்கூட பர்மியூடாவுக்கு ஒரு வகையான மர்ம வடிவமே கொடுக்கப்பட்டடிருக்கிறது.
பர்மியூடா முக்கோணத்தில் நடைபெறும் மறைவுகளையும், அங்கே பொதிந்திருக்கும் மர்மத்தையும் கண்டுபிடிக்கவென்று அனுப்பவைக்கப்பட்ட ஆராய்ச்சிக் குழுக்களும், மாயமாக மறைந்துபோன சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. வட அமெரிக்காவுக்கு வெளியேயுள்ள நாடுகளின் கப்பல்களும், இந்த மர்ம இடத்திலிருந்து மறைந்திருக்கின்றன.
1950-ம் ஆண்டில் இருந்து, 1954-ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் இங்கிருந்து, ஒன்பது கப்பல்கள் மாயமாக மறைந்திருக்கின்றன. ஒன்பதில் இரண்டு கப்பல்கள் ஜப்பானியக் கப்பல்கள். ஜப்பானிய அரசும் சொந்தமாக விசாரணை எல்லாம் செய்து பார்த்தது. விடை கிடைக்கவில்லை.
1955-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்தக் கடற்பகுதியை ‘அபாயப் பிரதேசம்’ என்று ஜப்பானிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அத்துடன் நிற்கவில்லை அவர்கள். கையோ மாறு-5 (Kaiyo Maru-5) என்ற நவீன வசதிகள் உடைய கப்பலில் விஞ்ஞானிகள் குழு ஒன்றை இந்தக் கடல் பகுதிக்கு அனுப்பியது ஜப்பானிய அரசு. மர்மங்களைக் கண்டுபிடிக்க அனுப்பப்பட்ட இந்த ஜப்பானிய விஞ்ஞானிகள் விசேட பயிற்சி பெற்றவர்கள். இந்த கப்பலில் சென்ற ஜப்பானிய விஞ்ஞானிகள் பர்மியூடா முக்கோணத்தின மர்மங்களைக் கண்டு பிடித்தார்களா?
இல்லை.
கையோ மாறு-5 கப்பலே, பர்மியூடா முக்கோணத்தின் கடற்பகுதியில் மாயமாக மறைந்து போனது. அதிலிருந்த பயிற்சி பெற்ற விஞ்ஞானிகள் ஒருவரது உடலோ, சிறிய உடைமையோ கூட கிடைக்கவில்லை. கப்பலின் ஒரு சிறு பலகைகூட தேடியும் கிடைக்கவில்லை.
இப்போது, ஜப்பானியர்களும், பிலிப்பின்ஸ்காரர்களும் இந்தக் கடல் பகுதியை பிசாசுக் கடல் என்கிறார்கள்.
மர்மம் தொடர்கிறது… இன்றுவரை!

நன்றி விறுவிறுப்பு 

No comments:

Post a Comment